மதுரை யாகப்பா நகரில் உள்ள பாலாஜி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சேதுபதி (31)- ராஜேஸ்வரி (30) தம்பதியினர். பெயின்டரான இவருக்கு, 2 மகள்கள் இருந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்பத் தகராறில் மனைவி ராஜேஸ்வரி தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சேதுபதி வீட்டில் இருந்த 2 மகள்களையும் கத்தியால் குத்தி, கொலை செய்துள்ளார். பின்னர், சேதுபதியும் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார்.
இது குறித்து தகவலறிந்த மதுரை அண்ணா நகர் போலீஸார் சேதுபதியை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளித்து, பின்னர் சிறைக்கு அனுப்பினர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த சேதுபதி, தனது மனைவி ராஜேஸ்வரியுடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளார்.
அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த நிலையில், நேற்று மதியம் வரை அவர்களது அறையின் கதவு திறக்கப்படாததால், விடுதி ஊழியர்கள் வேளாங்கண்ணி போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில், போலீஸார் வந்து கதவை திறந்து பார்த்த போது, தம்பதி இருவரும் விஷம் அருந்திய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளனர்.
இதையடுத்து, அவர்கள் உடலை மீட்ட போலீஸார் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.