மதுரை: சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதுரை மாவட்டம், காசிபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த 2015ல் சொத்து மதிப்பு சான்றிதழ் கேட்டு, அப்போது திருமங்கலம் வட்டாட்சியராக பணிபுரிந்த பால சுப்பிரமணியனை அணுகினார். சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க பாலசுப்பிரமணியன் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக சரவணன் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் யோசனைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை சரவணன் பால சுப்பிரமணியனிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.
இந்த வழக்கை மதுரை லஞ்ச ஒழிப்பு வழக்குளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா விசாரித்தார். விசாரணை முடிந்த நிலையில் இரு பிரிவுகளில் முறையே 3 ஆண்டு மற்றும் 4 ஆண்டு சிறை தண்டனையும், சிறை தண்டனையை ஏக காலத்தில் (4 ஆண்டு) அனுபவிக்க வேண்டும், ரூ.4 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் முத்துசெல்வி வாதிட்டார்.