கோவை: மாநகரில் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், குற்றச் செயல்களிலும் ஈடுபடும் ரவுடிகள் மீதான தடுப்பு நடவடிக்கைகளை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக, குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீதான அச்சத்தால், அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முன் வரத் தயங்கும் சூழல், ரவுடிகள் மீதான அச்சத்தால் நீதிமன்றத்தில் சாட்சிகள் அளிக்க சாட்சிகள் தயங்குதல் போன்ற விவகாரங்களில் தொடர்புடைய ரவுடிகளை கண்டறிந்து, சென்னை மாநகர காவல் சட்டம் 1888, பிரிவு 51-ஏ-ன் படி, கோவை மாநகர காவல் துறையினர் தொடர்புடைய ரவுடிகளை கோவை மாநகரை விட்டு 6 மாதங்களுக்கு வெளியேற்று கின்றனர்.
கோவை மாநகர காவல் துறை நிர்வாகத்தின் சார்பில், கடந்த 4 மாதங்களில் மட்டும் 140 ரவுடிகள் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன்படி, செல்வபுரம் அருகேயுள்ள தெலுங்குபாளையம் புதூரைச் சேர்ந்த தனஞ்ஜெயன் என்ற தொட்டி ஜெயா (34) என்ற ரவுடியை, கோவையை விட்டு வெளியேற்றி மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், இவர் தடையை மீறி கோவை மாநகருக்குள் நுழைந்து சட்டம் ஒழுங்கு பாதிப்பு செயல்களில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது நடவடிக்கைகளை கண்காணித்த செல்வபுரம் போலீஸார், ரவுடி தனஞ்ஜெயனை நேற்று கைது செய்தனர்.