மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை


திருவள்ளூர்: மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் அடுத்த அன்னம்பேடு கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் கடந்த 2007 -ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளியான 20 வயது பெண், தன் அண்ணன், அக்கா, மாமா என, குடும்பத்தினருடன் தங்கி பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், அதே செங்கல்சூளையில் பணிபுரிந்து வந்த சக தொழிலாளிகளான, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருமலை(19), ஆனந்த்(20) ஆகிய இருவர், கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் 8-ல் செங்கல்சூளை வளாகத்தில் குடும்பத்தினருடன் உறங்கி கொண்டிருந்த, மாற்றுத்திறனாளி பெண்ணை வெளியில் தூக்கிக்கொண்டு, செங்கல்சூளை பின்புறம் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்து பட்டாபிராம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, திருமலை, ஆனந்த் ஆகிய இருவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைத்தனர். தொடர்ந்து, பிணையில் வந்த திருமலையும், ஆனந்தும், திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணைக்கு, கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஆஜராகாமல் தலைமறைவாகினர்.

இதையடுத்து, இருவர் மீதும் நீதிமன்றம் பிணையில் இல்லா பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு விருதுநகரில் தலைமறைவாக இருந்த திருமலையை பட்டாபிராம் போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
திருமலை மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் அரசு வழக்கறிஞர் தமிழ்இனியன் ஆஜராகி வாதிட்டார். முடிவுக்கு வந்த இந்த வழக்கு விசாரணையில், திருமலை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை, திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதி ஜூலியட் புஷ்பா இன்று மாலை அளித்தார். அதில், மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை தூக்கி சென்று அடைத்து வைத்த குற்றத்துக்கு ஓராண்டு சிறை தண்டனையும், பெண்ணை அடித்து துன்புறுத்திய குற்றத்துக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

x