மனைவி, குழந்தை கொலை வழக்கில் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மேற்கு வங்க தொழிலாளி கைது


திருவள்ளூர்: மப்பேடு அருகே நடந்த மனைவி, குழந்தை ஆகிய இருவர் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மேற்கு வங்க மாநில தொழிலாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அருகே உள்ள கல்லம்பேடு கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிகமாக தங்கி தனியார் கம்பெனியில் பணி செய்து வந்தவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அஷ்ரப் அலி(36). இவர் கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 27-ல் தன் மனைவி ஷகிமா மற்றும் ஒன்றரை வயது குழந்தை சபீர் அலி ஆகியோரை கொலை செய்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மப்பேடு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, நீதிமன்ற காவலுக்குட்படுத்தப்பட்ட அஷ்ரப் அலி, கடந்த 2010-ம் ஆண்டு நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு, அஷ்ரப் அலி, வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.

இதையடுத்து, நீதிமன்ற பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்திரவின்பேரில், திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி தலைமையிலான தனிப்படை போலீஸார் மேற்குவங்க மாநிலத்தில் பதுங்கியிருந்த அஷ்ரப் அலியை கைது செய்து, இன்று நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

x