கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே இளைஞர் கொலை வழக்கில் தம்பதி உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே காரண்டப்பள்ளி பகுதியில் உள்ள கல் குவாரி குட்டை நீரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளைஞர் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற தேன்கனிக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்து கிடந்தவர் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த வேலுமணி (38) என்பது தெரிந்தது.
மேலும், விசாரணையில் பி.செட்டிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓட்டுநர் மஞ்சுநாத் (34). இவரது மனைவி சில்பா (28). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டின் எதிரே உள்ள வீட்டில் வேலுமணி தங்கி அருகேயுள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதில், சில்பாவுக்கும் வேலுமணிக்கும் தவறான நட்பு ஏற்பட்டுள்ளது. இதை மஞ்சுநாத் கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் சில்பா, வேலுமணியைத் திருமணம் செய்து கொண்டு சென்னையில் குடியிருந்து வந்துள்ளனர். அங்கு சில்பாவுக்கும், வேலுமணிக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், வெறுப்படைந்த சில்பா மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ பி.செட்டிப்பள்ளிக்கு வந்து தனது அண்ணன் மோகன் பாபு (31) மூலம் மஞ்சு நாத் சமாதானம் செய்து வைத்துள்ளார். இதனிடையே, மேலுமணி மீண்டும் வந்து இடையூறு செய்வார் எனக்கருதிய மோகன் பாபு, வேலுமணியைக் கடந்த 10-ம் தேதி பி.செட்டிப்பள்ளிக்கு வரவழைத்துள்ளார்.
அங்கு வந்த அவரை, மோகன்பாபு, சில்பா, மஞ்சுநாத் ஆகியோர் சேர்ந்து குந்துகோட்டையில் உள்ள ஒரு வீட்டில் 4 நாட்களாக அடைத்து வைத்து அடித்து சித்தரவதை செய்துள்ளனர். இதில் உயிரிழந்த வேலுமணி யின் உடலில் கல்லைக் கட்டி கல்குவாரி குட்டையில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, சில்பா, மஞ்சுநாத், மோகன்பாபு, கொலைக்கு உதவிய ஓட்டுநர் மதுசூதனன் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.