தாயை கடப்பாரையால் அடித்துக் கொன்ற மகன்: கும்பகோணம் அருகே பயங்கரம்


தஞ்சை: கும்பகோணம் அருகே தாயை அடித்து கொலை செய்த மகனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

கும்பகோணம் அருகே ஆடுதுறை எஸ்‌எம்எஸ்.கார்டன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மனைவி பிருந்தா (40). இவர்களது மகன்கள் அருண்குமார் (18), அன்புக்கரசன் (15). மகள் ஐஸ்வர்யா (10).

ஸ்டாலினுக்கும் பிருந்தாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனவருத்தம் ஏற்பட்டுள்ளது. இதனால், குத்தாலம் அருகே அஞ்சாறு வார்த்தலையில் வசிக்கும் தனது தாய் வீட்டுத்கு மகள் ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு பிருந்தா சென்று விட்டார். மகன்கள் இருவரும் தந்தையுடன் இருந்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்டாலின் திருநாகேஸ்வரத்தைச் சேர்ந்த உமாமகேஸ்வரி என்ற பெண்ணை 4 ஆண்டுகளு க்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. ஸ்டாலின் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து, குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக உமா மகேஸ்வரி திருநாகேஸ்வரத்தில் உள்ள தமது பிறந்தவீட்டுக்கு சென்று விட்டாராம்.

இதையடுத்து, தனது மகன்களுடன் வாழ முடிவு செய்த பிருந்தா, 4 நாட்களுக்கு முன்பு தனது மகள் ஐஸ்வர்யாவுடன், ஆடுதுறையில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த மூத்த மகன் அருண்குமார், எங்களை சிறிய வயதில் ஏன் விட்டுவிட்டு சென்றீர்கள். இப்போது ஏன் வந்துள்ளீர்கள் எனக் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். தொடர்ந்து, இது தொடர்பாக நேற்று அருண்குமார்- பிருந்தா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அருண் குமார் வீட்டிலிருந்த கடப்பாரை எடுத்து பிருந்தா தலையில் அடித்துள்ளார். இதில், மயங்கி விழுந்த பிருந்தா அதே இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த திருவிடைமருதூர் டிஎஸ்பி ராஜு, இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், பிருந்தாவின் உடலை கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அருண்குமாரை கைது செய்தனர்.

x