ஆரணி அருகே கத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது: சீரழிக்கும் ரீல்ஸ் மோகம்


திருவண்ணாமலை: ஆரணி அருகே கத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

‘ரீல்ஸ்’ மோகத்தால் சீரழியும் என்ற தலைப்பில் மிகப்பெரிய பட்டிமன்றம் நடத்தி விடலாம். ரீல்ஸ் வெளியிடுவதற்காக பேருந்து மற்றும் ரயிலில் தொங்கிக் கொண்டு இளைஞர்கள் பயணிக்கின்றனர். இவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். இரு சக்கர வாகன சாகசகத்திலும் ஈடுபட்டு, மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். இளைஞர்களுக்கு இணையாக இளம்பெண்களும் ரீல்ஸ் மோகத்தால் சீரழிகின்றனர். மாணவ, மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகளும் விதிவிலக்கல்ல.

கெத்து காட்டுகிறோம் என்ற பெயரில் பட்டா ‘கத்தி’யில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது, கத்தியுடன் போஸ் கொடுக்கும் செயலில் ஈடுபட்டு ரீல்ஸ் வெளியிடும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காவல்துறையினர் தகுந்த பாடங்களை புகட்டி வந்தாலும், இளைஞர்களிடம் மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை. இளைஞர்களின் அடாவடி ரீல்ஸ் வெளியீடு, தொடர்ந்து வண்ணமாக இருக்கிறது. இந்த வரிசையில் தற்போது இடம் பிடித்து இருப்பவர், ஆரணி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.

ஆரணி அடுத்த நெசல் கிராமத்தில் வசிக்கும் கூலி தொழிலாளி ஆறுமுகம் மகன் நேமி குமார் (20). வேலையின்றி வீட்டில் சுற்றி வரும் இவரது ‘ரீல்ஸ்’ ஒன்று, சமூக வலைதளத்தில் வைரலானது. இதில், பின்னணி பாடலுடன் பட்டா கத்தியுடன் நேமிகுமார் தோன்றுகிறார். இடுப்பில் இருந்து கத்தியை வெளியே எடுத்து நேமிகுமார் சுழற்றும்போது, “அருவாவை எடுத்து தலையை தனியாக எடுத்துவிட்டேன், ஸ்டேஷனிலட கொடுத்துவிட்டேன், சரணடைந்து விட்டேன், எல்லா சிறையும் பார்த்துவிட்டேன்” என்ற பாடல் ஒலிப்பரபாகி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ஆரணி கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நேமிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். காவல்துறையினர் கூறும்போது, “சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடம் கைபேசி பழக்கம் அதிகரித்துள்ளது. இதில் சிறுமிகளும், இளம் பெண்களும் அடங்கும். கைபேசியில் காட்சிகளை பதிவு செய்து ரீல்ஸ் வெளியிடுகின்றனர். இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர். ரவுடியை போன்று கெத்து காட்டுகிறோம் என்ற பெயரில், கத்தியுடன் போஸ் கொடுக்கின்றனர். இது சட்டப்படி குற்றமாகும். இந்த செயலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

சினிமா மோகத்தால் பலரும் தவறு செய்து விடுகின்றனர். பிள்ளைகளை பெற்றோரும் கண்காணிக்க வேண்டும். மேலும், பிள்ளைகளுக்கு நல்ல போதனைகளை கூற வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரியில் தமது பிள்ளையை ஆசிரியர்கள் கண்டித்தால், அவர்களை நல்வழிப்படுத்தான் கண்டிக்கின்றனர் என நினைக்க வேண்டும். தவறினால், காவல் துறையினர் பாணியில் போதிக்க வேண்டிய கட்டாயம் எதிர்காலத்தில் ஏற்படும்” என்றனர்.

x