வேலூர்: குடியாத்தத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியைச் சேர்ந்தவர் இலியாஸ் (54). இவர், 14 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்போதைய காவல் ஆய்வாளர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். வழக்கில் கைதான இலியாஸ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கின் விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு விசாரணை நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இதில், இலியாஸூக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், அந்த தொகையை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.