தூத்துக்குடி: கோவில்பட்டியில் சுடுகாடு அருகே கஞ்சா விற்பனை செய்த 6 பேரை போலீஸார் கைது செய்து, 24 கிலோ 890 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டியில் டி.எஸ்.பி. ஜெகநாதன் உத்தரவின் பேரில் கஞ்சா, போதை பொருள் விற்பனை, கடத்தலை தடுக்க போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 25ம் தேதி அதிகாலை புதுக் கிராமம் சுடுகாடு அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வந்த தகவலை தொடர்ந்து, தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் செந்தில்வேல் முருகன் மற்றும் போலீஸார் குறிப்பிட்ட பகுதிக்கு சென்றனர்.
அப்போது சுடுகாடு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மந்தித்தோப்பு காமராஜ் நகரை சேர்ந்த ராஜசேகர பாண்டி (32), கோபாலபுரத்தை சேர்ந்த கருப்பசாமி (33) மற்றும் ஜோதி நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 10.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மூப்பன்பட்டி சுடுகாட்டு பகுதியில் நேற்று முன்தினம் சந்தேகப்படும்படியாக காருடன் சிலர் நிற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர் முகமது மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். காரை சோதனையிட்ட போது கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அவர்கள் கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்த உதயகுமார் மகன் அருண்குமார் (23), கயத்தாறு அருகே நாகலாபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் கொம்பையா பாண்டியன் (21), தெற்கு கோனார்கோட்டையைச் சேர்ந்த தங்க ராஜ் மகன் மகாராஜா (19), கோவில்பட்டி வ.உ.சி நகரைச் சேர்ந்த குருநாதன் மகன் கார்த்திக் (20) ஆகியோர் என்பதும், வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. 4 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 23.790 கிலோ கஞ்சாவையும், கார், 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
இதே போல், கோவில்பட்டி பாரதி நகரில் உள்ள தேநீர் கடை அருகே கஞ்சா விற்பனை செய்த வ.உ.சி. நகரை சேர்ந்த நிர்மல் குமார் மகன் சங்கர நாராயணன் (26), பாரதி நகரை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் கரண் குமார் (26) ஆகிய இருவரையும் மேற்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்து, 1.100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.