திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றுவிட்டு சிறைக்குத் திரும்பும்போது தப்பியோடிய போக்சோ வழக்கு விசாரணைக் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே போடி காமன்வாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமு என்ற வினித் (29). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜனவரியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக செம்பட்டி போலீஸார் போக்சோ வழக்குப் பதிவு செய்து வினித்தைக் கைது செய்தனர்.
இதையடுத்து திண்டுக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். ஏப்ரல் 23ம் தேதி விசாரணைக்கு திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு வினித்தை மீண்டும் திண்டுக்கல் சிறைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். திண்டுக்கல் புறவழிச் சாலை பகுதியில் செல்லும் போது வினித் போலீஸாரிடம் இருந்து தப்பினார். தப்பியோடியவரை செம்பட்டி போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை போடி காமன்வாடி கிராமத்துக்கு வெளியே ஒரு மரத்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது. போலீஸார் சென்று பார்த்தபோது, அவர் தப்பியோடிய வினித் எனத் தெரிய வந்தது. இது குறித்து செம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.