ஊட்டி: சுற்றுலா பயணியின் கார் கண்ணாடியை உடைத்து 20 பவுன், ரூ.7 லட்சம் திருட்டு


ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியை சேர்ந்தவர் பென்மெட்சா வெங்கட் அகில் வர்மா (26). இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பயிற்சிக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் கடந்த 6 மாதமாக தங்கி பணியாற்றி வருகிறார்.

இவரது உறவினர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். கடந்த 26ம் தேதி மதியம் 4 மணிக்கு ஊட்டி படகு இல்லத்துக்கு சென்றனர். அங்குள்ள வாகன நிறுத்தத்தில் போதிய இடவசதி இல்லாததால், காந்தல் முக்கோணம் பகுதியில் உள்ள கோயில் அருகே படகு இல்லத்தை ஒட்டிய சாலையில் காரை நிறுத்திச் சென்றனர். ஒரு மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் கார் இருக்கும் பகுதிக்கு வந்தனர். காரின் பின்புற கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.

காரை திறந்து பார்த்த போது, காருக்குள் வைத்திருந்த 20 பவுன் நகை, ரூ.7 லட்சம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து ஊட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் நவீன் குமார், காவல் ஆய்வாளர் சந்திர சீலன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x