திருப்பாலைக்குடி அருகே கிராமத் தலைவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகே குயவனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிலிங்கம்(65). கிராமத் தலைவரான இவர் நேற்று பகலில் வெளியில் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
நேற்று மாலையில் நடைபெற இருந்த கிராம கூட்டத்தில் காசிலிங்கம் கலந்து கொள்ளாததால், கிராமத்தினர் அவரது வீட்டுக்குச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது வெளியே சென்ற அவர் வீடு திரும்பாதது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கிராமத்தினர் தேடினர். அப்போது கிராமத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள கோயில் அருகே கருவேல மர காட்டு பகுதியில் அவரது இருசக்கர வாகனம் நின்றது. அதையடுத்து இரவில் காட்டு பகுதியில் தேடியபோது, உடலில் பல இடங்களில் கத்தி குத்தி காயங்களுடன் காசிலிங்கம் இறந்து கிடந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்த திருப்பாலைக்குடி போலீஸார் அவரது உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். காசிலிங்கத்தின் நெருங்கிய உறவினர் குடும்பத்துடன் பிரச்சினை இருந்ததாகவும், இதில் ஏதும் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீஸார் விசாரிக்கின்றனர்.