கூடா நட்பால் கொடூரம்: தென்காசி தொழிலாளி கொலையில் மனைவி, ஆண் நண்பர் கைது


தென்காசி: வீரகேரளம்புதூர் அருகே கட்டிட தொழிலாளி கொலையில் அவரது மனைவி, ஆண் நண்பர் கைது செய்யப்பட்டனர்.

வீரகேரளம்புதூர் அருகே உள்ள ராஜகோபாலபேரியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஆமோஸ் (26), கட்டிட தொழிலாளி. இவர், தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் அருகே உள்ள மீரான் குளத்தை சேர்ந்த நந்தினி (23) என்பவரை காதலிதது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஹன்சிகா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக கடையம் அருகே உள்ள நாலாங்கட்டளையில் வாடகை வீட்டில் மனைவி, குழந்தையுடன் ஆமோஸ் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம வீட்டில் இருந்த ஆமோஸை மர்ம நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார். இது குறித்து தகவல் அறிந்த கடையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆமோஸ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில ஆமோஸ் மனைவி நந்தினியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையைச் சேர்ந்த அந்தோணி டேனிஸ் (32) என்பவரிடம் கட்டிட வேலைக்கு ஆமோஸ் சென்று வந்தார். அவரிடம் செல்போன் இல்லாததால் நந்தினியின் செல்போனில் அந்தோணி டேனிஸ் தொடர்பு கொண்டு பேசி, ஆமோஸை வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அடிக்கடி பேசியதில் இருவருக்கும் இடையே கூடா நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர்.

இதுபற்றி ஆமோஸுக்கு தெரியவந்ததால் நந்தினியை கண்டித்துள்ளார். அதன் பின்னர் அவர் அந்தோணி டேனிஸுடன் வேலைக்கு செல்லவில்லை. இந்நிலையில், ஆமோஸ் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு அந்தோணி டேனிஸ் சென்று நந்தினியிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஆமோஸ் அங்கு வந்ததால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆமோஸ் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, நந்தினி, அந்தோணி டேனிஸ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

x