தென்காசி: சிவகிரி பகுதியில் பெண் ஒருவர் தனது 9 வயது மகளுடன் சாலையோரம் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக 15 வயது சிறுமி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அந்த வாகனம் மோதியதில், நடந்து சென்றுகொண்டு இருந்த சிறுமி காயமடைந்தார். சிவகிரி போலீஸார் விசாரணை நடத்தி, 15 வயது சிறுமிக்கு இருசக்கர வாகனத்தை ஓட்ட அனுமதித்த அவரது தந்தையான சிவகிரி வடக்கு தெருவைச் சேர்ந்த குருசாமி என்பவரை கைது செய்தனர்.
இது குறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் கூறும்போது, ‘சாலை விதிகளை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் சாலை விதிகளில் அலட்சியம் காட்டினால், அது உங்கள் குழந்தைக்கு பெரும் ஆபத்தில் முடியலாம். இது போன்ற விஷயங்களில் அலட்சியம் காட்டக்கூடாது. 18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமிகளுக்கு இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.