சிவகங்கை அருகே முன்விரோதத்தில் திமுக நிர்வாகி வெட்டி கொலை: 3 பேர் கைது


கொலை செய்யப்பட்ட பிரவீன்குமார் (அடுத்த படம்) சிவகங்கை அரசு மருத்துவமனை அருகே மானாமதுரை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட பிரவீன்குமாரின் உறவினர்கள்.

சிவகங்கை: சிவகங்கை அருகே முன்விராதத்தில் திமுக நிர்வாகி வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் மூவரை போலீஸார் கைது செய்தனர். கொலையை கண்டித்து மறியலில் ஈடுபட்ட உறவினர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமரசப்படுத்தினார்.

சிவகங்கை அருகே சாமியார்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் ( 27). திமுக விளையாட்டு மேம்பாட்டு பிரிவு மாவட்டத் துணை அமைப்பாளராக இருந்தார். மேலும் ஒப்பந்ததாரராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இன்று பிற்பகல் பிரவீன்குமார் தனது தோட்டத்துக்கு காரில் சென்றார். தோட்டத்தில் இருந்த அவரை இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.

படுகாயமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு காரில் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் வழியிலேயே பிரவீன்குமார் உயிரிழந்தார். இதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் உறவினர்கள், நண்பர்கள் மருத்துவமனை முன், மானாமதுரை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் சாமியார்பட்டியைச் சேர்ந்த இந்திராணி (50) மயங்கி விழுந்தார். அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இரண்டு மணி நேரத்துக்கு மேலாக மறியல் தொடர்ந்ததை அடுத்து, வாகனங்கள் வேறுவழியில் திருப்பிவிடப்பட்டன. மறியலில் ஈடுபட்டோரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், டிஎஸ்பி அமல அட்வின் மற்றும் போலீஸார் சமரசப்படுத்தி கலைந்து போக செய்தனர். இதுகுறித்து சாமியர்பட்டி கிராம மக்கள் கூறுகையில், “எங்கள் கிராமத்தில் சமூகவிரோத செயல்கள் நடப்பதாக தொடர்ந்து போலீஸில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. தற்போது கொலை நடந்துள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

தொடர்ந்து டிஎஸ்பி அமலஅட்வின் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் இக்கொலையில் தொடர்புடைய சாமியார்பட்டியைச் சேர்ந்த விக்கி (எ) கருணாகரன் (20), சிவகங்கை காளவாசல் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (19), திருப்பத்தூர் அருகே நரசிங்கபுரத்தைச் சேர்ந்த குரு (21) ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 வாள்கள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சாமியார்பட்டியில் ஒரு வாரத்துக்கு முன், ஒரு வழக்கில், விக்கியின் தம்பியை போலீஸார் கைது செய்தனர். தனது சகோதரர் கைதுக்கு பிரவீன்குமார் தான் காரணம் என்று எண்ணிய விக்கி, தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்” என்றனர்.

x