குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்று தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்: விக்கிரவாண்டி சோகம்


விழுப்புரம்: விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் புனிதன் (21). சென்ட்ரிங் மேஸ்திரியான இவர் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு விக்கிரவாண்டி உஸ்மான் நகரைச் சேர்ந்த பெளசியா (21) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த 20 நாட்களுக்கு முன்னர் இந்த தம்பதிக்கு இஸ்வான் என்ற ஆண் குழந்தை பிறந்தது. கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த பெளசியா, குழந்தை பெற்றதால் தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 1 மணியளவில் வீட்டில் தனியாக இருந்த பெளசியா, 20 நாட்களே ஆன தனது ஆண் குழந்தையை வீட்டின் பின்புறம் வாளியிலிருந்த தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தார். பின்னர் மாலை 4 மணி அளவில் பெளசியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்த புனிதன் மருத்துவமனைக்கு வந்தார்.

இது குறித்து விக்கிரவாண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கவலைக் கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் பெளசியாவிடம், விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் சத்ய நாராயணன் சம்பவம் குறித்து பெளசியாவிடம் விசாரணை செய்து வாக்கு மூலம் பெற்றார்.

x