புதுக்கோட்டை: குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை அருகே வடவாளம் கீழக்காயாம்பட்டியைச் சேர்ந்தவர் வீரமுத்து (35). இவரது மனைவி ராஜேஸ்வரி (28). இருவரும் கட்டிடத் தொழிலாளர்கள். இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், வீரமுத்து நேற்று முன்தினம் இரவு தனது 3 பிள்ளைகளையும் அருகில் வசித்து வரும் தனது தாயார் லட்சுமியின் வீட்டில் விட்டுவிட்டு, மனைவியுடன் கல்லுப்பள்ளத்தில் உள்ள விநாயகர் கோயில் திருவிழாவில் நடைபெற்ற நாடகத்தை பார்க்கச் சென்றுவிட்டனர்.
பின்னர், வீரமுத்துவின் தாய் லட்சுமி நேற்று காலை 3 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு, வீர முத்துவின் வீட்டுக்குச் சென்றார். அப்போது, வீட்டுக்குள் ராஜேஸ்வரி கழுத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையிலும், வீரமுத்து தூக்கில் தொங்கிய நிலையிலும் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்த தகவலின்பேரில் செம்பட்டி விடுதி போலீஸார் அங்கு சென்று, இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக வீரமுத்து தனது மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.