மயிலாடுதுறை: செம்பனார்கோவில் அருகே முடிகண்டநல்லூர் நடுத் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர ராஜ் (28). இவர், சென்னை தாம்பரம் பகுதியில் கொத்தனார் வேலை பார்த்தபோது, சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, 2021ம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்துள்ளார்.
இதையடுத்து, சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு 17 வயது தான் ஆகிறது என்பதை கண்டறிந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த மயிலாடு துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ஆரோக்கிய ராஜ் விசாரணை நடத்தி, மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று முன்தினம் சுந்தர் ராஜை கைது செய்தனர்.