14 வயது சிறுமி கர்ப்பம்: தஞ்சை இளைஞர் போக்சோவில் கைது


தஞ்சை: தஞ்சாவூர் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.கவியரசன் (24). ஐடிஐ முடித்துள்ளார். இவருக்கு 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததில் அச்சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையறிந்த அச்சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கவியரசனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொழிலதிபர் மீது வழக்கு.. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அருள்சூசை (50). தொழில் அதிபரான இவர் வெளி நாடுகளில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர், தாய் இல்லாத- உறவினர் பராமரிப்பில் வளர்ந்து வரும் பிளஸ் 1 படித்து வரும் 17 வயது சிறுமியுடன் பழகி, அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதில், கர்ப்பம் தரித்ததால், அச்சிறுமி பள்ளிக்குச் செல்வதை நிறுத்தியுள்ளார். இதனிடையே, அச்சிறுமிக்கு 2 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் மூலம் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறுமியின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் அருள்சூசை மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

x