வேலூர்: ஆன்லைனில் பகுதி நேர வேலை எனக்கூறி வேலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி முதுகலை மருத்துவ மாணவரிடம் ரூ.11.59 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் குற்றப் பிரிவு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வேலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 27 வயது மாணவர் முதுகலை மருத்துவம் படித்து வருகிறார். இவரது கைப்பேசி எண்ணுக்கு டெலி கிராம் செயலியில் ஆன்லைன் பகுதி நேர வேலை மூலம் ரூ.15 ஆயிரம் முதலீடு செய்து ரூ.28 ஆயிரம் சம்பாதிக்க முடியும் எனக் குறுஞ் செய்தி வந்துள்ளது. இதனை உண்மை என நம்பிய இந்த மாணவர், அந்த குறுஞ் செய்தியில் இடம் பெற்றிருந்த இணைய தளத்தில் சென்று தனது வங்கி விவரங்களைப் பதிவிட்டு ஒரு கணக்கைத் தொடங்கியுள்ளார்.
பின்னர், அந்த செயலி வழியாகச் சிறிய தொகையை முதலீடு செய்து அந்த தளத்தில் அளிக்கப்பட்ட வேலைகளை முடித்துக் கொடுத்து பெரிய தொகையை லாபமாக ஈட்டியுள்ளார். இதன் மூலம் ஏற்பட்ட நம்பிக்கையில் தொடர்ந்து பல தவணைகளாக மொத்தம் 11 லட்சத்து 59 ஆயிரத்து 645 ரூபாயை முதலீடு செய்துள்ளார். ஆனால், அதன்பிறகு அவரால் அந்த தொகையைத் திரும்பப் பெற முடியவில்லை.
தொடர்ந்து, அந்த டெலி கிராம் தளத்தில் கொடுக்கப்பட்ட எண்ணைத் தொடர்பு கொண்டபோது மேலும் ரூ.5.02 லட்சம் முதலீடு செய்தால் தான் பணத்தைத் திரும்பப் பெற முடியும் எனத் தெரிவித்துள்ளனர். அப்போது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவர், வேலூர் மாவட்ட சைபர் குற்றப் பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்த மோசடி நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.