திருச்சி: ஏர்போர்ட் வசந்த நகரைச் சேர்ந்தவர் நாசர் அலி (30). கே.கே.நகரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு பெண்ணுடன் கூடா நட்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஏப்.24-ம் தேதி அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற நாசர் அலி, மறுநாள் (நேற்று முன்தினம்) காலை அந்தப் பெண்ணின் 5 வயது மகனை தனது நண்பரான நாகமங்கலம் செவன்பட்டியைச் சேர்ந்த வேலுமணி (29) என்பவருடன் காரில் கடத்திச் சென்றுள்ளார்.
சூரக்குடிப்பட்டி பகுதிக்கு சென்று, காரிலேயே மது அருந்திய நாசர் அலி, வேலுமணி ஆகியோர், சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்து, அடித்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டதுடன், இருவரையும் பிடிக்க முயற்சித்தனர். அப்போது, வேலுமணி தப்பியோடிவிட நாசர் அலி மட்டும் சிக்கினார்.
இதையடுத்து, மக்கள் அளித்த தகவலின் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்க்கரசி அங்கு சென்று, நாசர் அலியை மீட்டார். தொடர்ந்து, தப்பியோடிய வேலுமணியையும் தேடி கண்டுபிடித்த போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.