திண்டுக்கல்: மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லை அடுத்த சின்னாளபட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாண்டி (45). இவரது மனைவி கல்யாணி (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குடும்பப் பிரச்சினை காரணமாக கணவரை பிரிந்த கல்யாணி, மகன்களுடன் ஒட்டன்சத்திரத்தை அடுத்த விருப்பாச்சியில் உள்ள தந்தை வீட்டில் தங்கியிருந்து தோட்ட வேலைக்குச் சென்று வந்தார். அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தோட்ட உரிமையாளர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், ஏப்.23-ம் தேதி தந்தை வீட்டில் இருந்த கல்யாணி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சத்திரப்பட்டி போலீஸார் கல்யாணியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று கல்யாணியின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களிடம் திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, கல்யாணியின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.