திருவாலங்காடு அருகே ரயிலை கவிழ்க்க சதியா? - 100 பேரிடம் ரயில்வே தனிப்படை விசாரணை


சென்னை: திருவாலங்காடு அருகே ரயில் தண்டவாள பகுதியில் இரு வேறு இடங்களில் போல்ட் நட்டுகள் மர்ம நபர்களால் அகற்றப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அரிசந்திராபுரம், திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூறு பேரிடம் ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை - அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்துக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் மோசூர் ரயில் நிலையத்துக்கும் இடையே அரிசந்திராபுரம் என்ற இடத்தில், சென்னை நோக்கி விரைவு ரயில்கள் செல்லும் தண்டவாள பகுதியில் நேற்று முன் தினம் அதிகாலை திடீரென சிக்னல் துண்டிக்கப்பட்டது ரயில்வே ஊழியர்களுக்கு தெரிய வந்தது. .

இதையடுத்து ரயில்வே பாயின்ட் மேன் சிக்னல் துண்டிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டபோது, அந்த தண்டவாள இணைப்பு பகுதியில் போல்ட் நட்டுகள் மர்ம நபர்களால் கழற்றப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சென்னை நோக்கி செல்லும் விரைவு ரயில்கள், மின்சார ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் இயக்கப்பட்டன. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

அரிசந்திராபுரம் பகுதியில் சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி மின்சார ரயில்கள் செல்லும் தண்டவாள பகுதியில் ஒரு போல்ட்டில் நட்டுகள் மட்டும் மர்ம நபர்களால் கழற்றப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து, தகவல் அறிந்த தெற்கு ரயில்வே சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உள்ளிட்ட உயரதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பகுதிகளில் மர்ம நபர்களால் கழற்றப்பட்ட போல்ட் நட்டுகளுக்கு பதில் புதிய போல்ட் நட்டுகளை பொருத்தி, தண்டவாளம் மற்றும் சிக்னல் இணைப்புகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். பணிகள் முடிவுக்கு வந்ததையடுத்து, நேற்று முன் தினம் காலை 9 மணியளவில் சென்னை நோக்கி விரைவு ரயில் செல்லும் தண்டவாளத்தில் விரைவு ரயில்கள் இயக்கம் தொடங்கியது.

இது குறித்து, திருவாலங்காடு ரயில் நிலைய மேலாளர் அளித்த புகாரின் பேரில், ரயிலை கவிழ்க்க சதி, பொது சொத்து சேதம், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சதி ஆகிய 3 பிரிவுகளின் கீழ் அரக்கோணம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, ரயில்வே போலீஸின் 3 தனிப்படை போலீஸார், திருவாலங்காடு ரயில் நிலையம், அரி சந்திராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், அரி சந்திராபுரம் மற்றும் திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூறு பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x