பாஜக இளைஞரணி நிர்வாகி நள்ளிரவில் வெட்டிப் படுகொலை: புதுச்சேரியில் அதிர்ச்சி


புதுச்சேரி: லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்து கொண்டிருந்த பாஜக இளைஞரணி துணைத் தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

புதுச்சேரியில் கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் உமா சங்கர் (40). இவர் புதுச்சேரி மாநில பாஜகவின் இளைஞரணி துணைத் தலைவராக இருந்தார். பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் சார்லஸ் மாட்டினுக்கு இன்று பிறந்தநாள் விழாவையொட்டி, கருவடிக்குப்பம் சித்தானந்த கோயில் அருகே ஏற்பாடுகளை உமாசங்கர் செய்து வந்தார். இந்த நிலையில் நள்ளிரவு கருவடிகுப்பம் பகுதியில் ஏற்பாடுகளை பார்வையிட சென்று கொண்டிருந்த உமாசங்கரை 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் உமா சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் லாஸ்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, உமாசங்கர் உடலை கைப்பற்றினர். இந்த சூழலில் அப்பகுதியில் அவரது உறவினர்கள் மற்றும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் இரண்டு மணி நேரம் அப்பகுதியில் போராட்டம் நீடித்தது. இதனையடுத்து டிஐஜி சத்திய சுந்தரம் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, இன்று அதிகாலை பிரேத பரிசோதனைக்காக உடலை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட உமா சங்கர் மீது புதுச்சேரி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. எனவே அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து லாஸ்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

x