நாகையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான `அம்பர்கிரிஸ்' எனப்படும் திமிங்கல உமிழ்நீரை போலீஸார் பறிமுதல் செய்து, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை கைது செய்தனர்.
நாகை புதிய பேருந்து நிலையத்தில் வெளிப்பாளையம் போலீஸார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வல்லவிளை சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மில்டன் ஜார்ஜ்(29) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அவரிடம் இருந்த பையில், அரசால் தடைசெய்யப்பட்ட அம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீர் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் வைத்திருந்த 1.5 கிலோ திமிங்கில உமிழ் நீரைப் பறிமுதல் செய்த போலீஸார், மில்டன் ஜார்ஜைக் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.50 கோடி மதிப்பிலான திமிங்கில உமிழ்நீரை, வனத் துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வனத் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தொடர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்