திசையன்விளை அருகே குழந்தை கொலை: தாய் உட்பட 4 பேர் கைது - கூடா நட்பால் கொடூரம்


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே இரண்டரை வயது குழந்தை கொலை செய்யப்பட்டது தொடர்பாக அக்குழந்தையின் தாய் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திசையன்விளை அருகே மகாதேவன்குளம் பகுதியை சேர்ந்தவர் பிருந்தா (27). இவரது கணவர் சரத் கோவையில் பணிபுரிகிறார். இந்நிலையில் தனது இரண்டரை வயது குழந்தை தர்ஷினி கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்டதாக சாத்தான்குளம் அருகே சண்முகபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று பிருந்தா தெரிவித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த பிருந்தாவின் தாய் , குழந்தை தர்ஷினியுடன் பிருந்தாவை அழைத்துக்கொண்டு திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.போலீஸார் அங்குவந்து விசாரித்தனர்.

பிருந்தாவின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீஸார் அவரிடம் விசாரித்தனர். பிருந்தாவுக்கு ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் இருந்ததாகவும் நேற்று முன்தினம் இரவு அந்த நண்பர் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் மகாதேவன்குளம் வீட்டிலிருந்து குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றதாகவும், அதிகாலையில் இறந்த நிலையில் குழந்தை தர்ஷினியை பிருந்தாவிடம் கூட்டாளிகளில் ஒருவர் ஒப்படைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து திசையன்விளை போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து பிருந்தா மற்றும் இட்டமொழி துவரம்பாடு பகுதியை சேர்ந்த லிங்க செல்வன், முத்து சுடர், பெஞ்சமின் ஆகியோரை கைது செய்தனர்.

x