யாசகம் எடுத்து பங்கு பிரிப்பதில் தகராறு: ராமநாதபுரத்தில் நண்பரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை


துரைப்பாண்டி

ராமநாதபுரம்: நண்பரை கொலை செய்தவருக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி என்ற சாதிக் (60). இவர் திருமணமாகாதவர். மதுரை கீழவாசல் லெட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (60). இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ள நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் குடும்பத்தைப் பிரிந்து ராமநாதபுரம் வந்துள்ளார்.

துரைப்பாண்டியும், சிவகுமாரும் கரோனா தொற்று காலத்தில் வேலை இல்லாததால், ராமநாதபுரம் வழிவிடு முருகன் ஆலயத்தில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது நண்பர்களான இருவருக்கும் இடையே, காசை பிரித்துக் கொள்வதில் கடந்த 30.8.2022-ல் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து, இருவரும் மது அருந்தியபோது துரைப்பாண்டி பீர் பாட்டில் மற்றும் கட்டையால் முத்துக்குமாரை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இது தொடர்பாக, ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, துரைப்பாண்டியை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் நேற்று முதன்மை மாவட்ட நீதிபதி மெகபூப் அலிகான், நண்பரை கொலை செய்த துரைப்பாண்டிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார்.

x