பட்டா மாறுதலுக்கு ரூ.3,500 லஞ்சம்: விருதுநகரில் விஏஓ கைது


கரைமேலு

விருதுநகர்: விருதுநகர் அருகே மல்லாங்கிணறில் பட்டா மாறுதலுக்கு ரூ.3,500 லஞ்சம் வாங்கிய விஏஓவை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். விருதுநகர் அருகே உள்ள சூரம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சூரியகுமார் (24).

இவரது தந்தை ஆசீர்வாதம் பெயரில் உள்ள பட்டாவை தனது பெயருக்கு மாற்றம் செய்யக்கோரி மல்லாங்கிணறு விஏஓ அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். பட்டாவில் பெயர் மாற்ற விஏஓ கரைமேலு (46) ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், அவ்வளவு தொகை தன்னால் தர முடியாது என சூரியகுமார் கூறியுள்ளார். பின்னர், ரூ.3,500 லஞ்சம் கொடுத்தால் பட்டாவில் பெயர் மாற்றி கொடுப்பதாக விஏஓ கரைமேலு கூறியுள்ளார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சூரியகுமார், இதுகுறித்து விருதுநகரில் உள்ள லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயன பொடி தடவிய 3,500 ரூபாய் நோட்டுகளை மல்லாங்கிணறு விஏஓ அலுவலகத்தில் வைத்து கரைமேலுவிடம் சூரியகுமார் நேற்று கொடுத்தார்.

அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் எஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸார், விஏஓ கரைமேலுவை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து, விஏஓ அலுவலகத்திலும், மதுரையில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் நேற்று இரவு சோதனை நடத்தினர்.

x