நாமக்கல்: குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக கடை உரிமையாளரிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற தொழிலாளர் துறை அதிகாரிக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருச்செங்கோடு நகரைச் சேர்ந்தவர் அம்பேத்கார் (64). இவர் திருச்செங்கோடு தொழிலாளர் துறை அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி திருச்செங்கோட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா என சோதனை நடத்தினார்.
அப்போது உதயகுமார் (48) என்பவருக்குச் சொந்தமான, ஒரு எலெக்ட்ரிக்கல் கடையில், 14 வயது சிறுவன், குழந்தை தொழிலாளராக பணியில் இருந்ததை கண்டுபிடித்து அந்த கடை உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினார். பின்னர் அந்த கடை உரிமையாளரிடம் நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
இதையடுத்து கடை உரிமையாளர் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையில் புகார் செய்தார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுறுத்தல்படி அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி கடை உரிமையாளர் உதயகுமார், தொழிலாளர் உதவி ஆய்வாளர் அம்பேத்காரிடம் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் கொடுக்கும்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் வழக்கின் மீதான விசாரணை நிறவடைந்தது. இதையடுத்து நேற்று அவ்வழக்கின் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி தொழிலாளர் உதவி ஆய்வாளர் அம்பேத்காருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.