சேலம் ஓமலூர் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு


சேலம்: ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோயில் திருவிழாவின் போது இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட பட்டாசு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் திரவுபதி அம்மன் கோயில் திருவிழா 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த 14 நாட்களாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவில் நாள்தோறும் அம்மன் ஊர்வலத்தின் போது வாண வேடிக்கைக்காக பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருகிறது. 15-வது நாளான நேற்று இரவு பூசாரிப்பட்டி பகுதியில் இருந்து கஞ்சநாயக்கன்பட்டிக்கு பக்தர்கள் கோயில் சீர்வரிசை எடுத்துச் சென்றுள்ளனர் அப்போது 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எடுத்து சென்றதாக தெரிகிறது.

அப்போது ஒருவர் பட்டாசை வரிசையாக வெடிக்க வைத்து சென்றபோது அதில் இருந்து பறந்த தீப்பொறி இருசக்கர வாகனத்தில் இருந்த பட்டாசுகள் மீது பட்டு வெடித்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

10 பேர் படுகாயம்: இதில் வாகனத்தில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்கள் யார் எப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. விபத்தில் காயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் ஓமலூர் மற்றும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சையின் போது ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து காடையாம்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

x