விழூப்புரம்: செஞ்சி அடுத்த மேல்களவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிலிங்கம். இவருக்கு அம்சவேணி (39 )என்ற மகளும், மணிகண்டன் (36) என்ற மகனும் உள்ளனர். அம்சவேணி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு திண்டுக்கல் மாவட்டம் கோவில்பட்டியில் வசித்து வருகிறார். மணிகண்டனுக்கு திருமணம் ஆகவில்லை. பட்டதாரியான இவர் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். அவர் தினமும் மது அருந்திவிட்டு வந்து பெற்றோரிடம் தகராறு செய்து வந்தார்.
இதனால் காசிலிங்கம் தனது சொத்தான 20 சென்ட் நிலத்தை மகள் அம்சவேணிக்கு தான செட்டில்மெண்ட் செய்துள்ளார். இது மணிகண்டனுக்கு தெரியவந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றோரை பார்க்க அம்சவேணி மேல்களவாய் கிராமத்திற்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மணிகண்டன் குடித்துவிட்டு வந்து பெற்றோரிடம் தகராறு செய்து, அவர்களை திட்டி அடித்தார்.
இதை பார்த்த அம்சவேணி பக்கத்தில் இருந்த கட்டையை எடுத்து மணிகண்டனை தலை மற்றும் முகத்தில் சரமாரியாக தாக்கினார். இதில் மயங்கி விழுந்த மணிகண்டனை சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து மேல்களவாய் கிராம நிர்வாக அலுவலர் ஓம் பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் செஞ்சி இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து அம்சவேணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.