மதுரை நீதிமன்றத்திலேயே கொலை மிரட்டல் விடுத்த குற்றவாளிகள்: நீதிபதிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு


மதுரை: கஞ்சா வழக்கில் தண்டனை பெற்ற சகோதரர்கள் பகிரங்க கொலை மிரட்டல் விடுத்ததால், தீர்ப்பளித்த நீதிபதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுரை முதலாவது கூடுதல் போதைப்பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரகுமார். இவர் நேற்று முன்தினம் மதுரை கீரைத்துறை காவல் சரகத்துக்கு உட்பட்ட கஞ்சா கடத்தல் வழக்கில், புதுஜெயில் ரோடு பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான பாண்டியராஜன் (23), ஜாக்கி என்ற பிரசாந்த் (22) மற்றும் பாண்டியராஜனின் மனைவி சரண்யா (20) ஆகியோருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பை கேட்டதும் பாண்டியராஜனும், ஜாக்கி என்ற பிரசாந்தும் நீதிமன்ற அறையின் கண்ணாடிகளை கைகளால் குத்தி உடைத்தனர். பின்னர் நீதிபதியின் பெயரை குறிப்பிட்டு, பகிரங்கமாக அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், நாங்கள் ரவுடி வெள்ளைக்காளியின் கூட்டாளிகள் என்றும், சிறையிலிருந்து வெளிவந்து அனைவரையும் கொல்வதாகவும் கூறினர். இதையடுத்து, இருவரையும் போலீஸார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கஞ்சா சகோதரர்களின் கொலை மிரட்டல் காரணமாக, நீதிபதி ஹரிஹரகுமார் வசிக்கும் மதுரை ரேஸ்கோர்ஸ் காலனியில் உள்ள வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதுவரை நீதிபதிக்கு துப்பாக்கி ஏந்திய தனிக் காவலர் பாதுகாப்பு மட்டும் அளிக்கப்பட்டது. இந்த மிரட்டல் காரணமாக வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

x