மதுரை: மதுரையில் நகைக்காக மூதாட்டியை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள முத்துநாகையாபுரத்தைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள் (67). இவரது கணவர் ராஜூ இறந்து விட்டார். இவரது மகன்கள் மற்றும் மகள்கள் திருமணம் முடிந்து தனியே வசித்து வருகின்றனர். வீட்டில் பேச்சியம்மாள் தனியே வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2013-ல் பேச்சியம்மாளின் வீட்டு கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதையறிந்த ராணுவ வீரரான அவரது மகன் சேகர், கதவை உடைத்து வந்து வீட்டினுள் சென்றார். வீட்டில் பேச்சியம்மாள் இறந்து கிடந்தார். அவரது உடல் கிடந்த கட்டிலை சுற்றிலும் மிளகாய் பொடி சிதறி கிடந்தது.
இதையடுத்து போலீஸார் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த லட்சுமி(50) என்பவரிடம் விசாரித்தனர். விசாரணையில் பேச்சியம்மாளை லட்சுமி கொலை செய்தது உறுதியானது.
தனியாக வசித்த பேச்சியம்மாளுக்கு துணையாக இருந்த லட்சுமி, அவரிடம் இருந்த நகைகளை திருடுவதற்காக கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீஸார் லட்சமியை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கே.எஸ்.முரளி வாதிட்டார். இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், லட்சுமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி என்.நாகலட்சுமி இன்று (ஏப்.25) தீர்ப்பளித்தார்.