‘இரிடியம் பானை’ என கூறி ரூ.2 லட்சம் மோசடி: கரூரில் 6 பேர் கைது


கரூர்: கரூர் அருகே இரிடியம் பானை எனக் கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த அம்மா முத்தம்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (38). திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை சேர்ந்தவர் வாசு என்கிற குமரேசன் (28). இருவரும் நண்பர்கள். குமரேசன் கரூரில் இரிடியம் இருப்பதாகவும், ரூ.5 லட்சம் கொடுத்தால் ரூ.15 லட்சமாக தருவதாக் கூறி கரூர் மாவட்டம் புலியூர் தனியார் சிமெண்ட் ஆலை பகுதிக்கு கடந்த 20ம் தேதி சிவக்குமாரை வரவழைத்துள்ளார்.

கரூர் தெற்கு காந்திகிராமம் பொன்னர் என்கிற பொன்னரசன் (38), பால்ராஜ் (40), தியாகு என்கிற தியாகராஜன் (43), கரூர் தாந்தோணிமலை சுரேஷ் (41), திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ராஜ்குமார் (38) ஆகியோருடன் சேர்ந்து குமரேசன் இரிடியம் பானை எனக்கூறி காக்கி செல்லோபேன் டேப் சுற்றிய பார்சலை காட்டியுள்ளனர்.

இதை நம்பி சிவக்குமார் ரூ.2 லட்சம் கொடுத்து விட்டு மதுரை சென்று திரும்பியப் பிறகு மேற்கண்டவர்களிடம் இரிடியம் பானையை கேட்டுள்ளார். அவர்கள் அதனை தர மறுத்து மிரட்டியுள்ளனர். இதுகுறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் சிவக்குமார் நேற்று புகார் அளித்தார்.

பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு புலியூர் தனியார் சிமெண்ட் ஆலை அருகே நேற்று வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் காரில் வந்த 6 பேரை கைது செய்தனர். காக்கி செல்லோ டேப் சுற்றுப்பட்ட பானை, மெடிக்கல் கிட் பாக்ஸ், ஆவணங்கள் அடங்கிய பை, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பால்ராஜ் மீது திருச்சி மாவட்ட குற்றப்பிரிவில் ஒரு வழக்கு மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் 1 வழக்கு, சுரேஷ் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் ஒரு வழக்கு, ராஜ்குமார் மீது திண்டுக்கல் மாவட்டத்தில் 3 வழக்குகள் உள்ளன. 6 பேரையும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று (ஏப்.25-ம் தேதி) அதிகாலை கரூர் கிளை சிறையில் அடைத்தனர்.

x