தென்காசி: சொத்து வரி நிர்ணயம் செய்ய ரூ.15,000 லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர் கைது  


தென்காசி: ரூ.15,000 லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், வடுகப்பட்டி கிராமம், தெற்குசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜன் (36). இவர், புளியங்குடி 28வது வார்டில் 3 சென்ட் காலி மனையை கடந்த 2020-ம் ஆண்டு வாங்கியுள்ளார். அதில் 800 சதுர அடியில் வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெற விசாரித்தபோது, முதலில் காலிமனை தீர்வை கட்ட சொல்லி கூறியுள்ளனர். இதையடுத்து, கடந்த மாதம் காலிமனை தீர்வை கட்டியுள்ளார்.

பின்னர், புதிதாக வீடு கட்டியதற்கு சொத்துவரி நிர்ணயம் செய்ய புளியங்குடி நகராட்சியில் விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து, நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமர், அந்த வீட்டை பார்வையிட்டு அளவீடு செய்துள்ளார். பின்னர், அலுவலகத்துக்கு வரும்படி காளிராஜிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அங்கு சென்ற காளிராஜிடம், ரூ.20 ஆயிரம் பணம் கொடுத்தால்தான் சொத்துவரி நிர்ணயம் செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்ற காளிராஜிடம் பேரம் பேசி, ரூ.15 ஆயிரம் கொடுத்தால்தான் சொத்து வரி நிர்யணம் செய்து, ரசீது கொடுப்பதாக கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத காளிராஜ், இதுகுறித்து தென்காசி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸாரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வருவாய் உதவியாளர் அகமது உமரை தனது வீட்டுக்கு வரவழைத்து கொடுத்துள்ளார்.

லஞ்ச பணத்தை அகமது உமர் பெற்றுக்கொண்டதை அறிந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி பால்சுதர், ஆய்வாளர் ஜெயஸ்ரீ மற்றும் போலீஸார் விரைந்து சென்று, அகமது உமரை கைது செய்தனர். பின்னர், புளியங்குடி நகராட்சி அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.

x