சிவகங்கையில் கணவர் மீது மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்ற மனைவி: 2 பேர் கைது


சிவகங்கை அருகே கணவர் மீது மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ய முயன்ற மனைவி உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, இருவரை கைது செய்துள்ளனர்.

சிவகங்கை அருகே செங்குளிபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (42). இவரது மனைவி கீதா (33). சுரேஷ் குமார் கடந்த 2008ம் ஆண்டிலிருந்து வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அங்கிருந்து பணத்தை தனது மனைவிக்கு அனுப்பி வந்துள்ளார். சமீபத்தில் ஊருக்கு திரும்பிய சுரேஷ் குமார், தான் அனுப்பிய பணம் குறித்து கீதாவிடம் கணக்கு கேட்டார். இதுகுறித்து சரியாக பதிலளிக்காததால், இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து, தனக்கு தெரிந்த ஆனைமாவலியைச் சேர்ந்த பிரபாகரன் (27), சிவகங்கை சேதுபதி நகரைச் சேர்ந்த ஜீவன் (30) ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சுரேஷ்குமார் மீது மின்சாரத்தை பாய்ச்சியுள்ளார். ஆனால், சுரேஷ்குமார் அங்கிருந்து தப்பி வெளியே ஓடினார். தொடர்ந்து, கீதா விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, சுரேஷ்குமாரை சிவகங்கை அரசு மருத்துவ மனையிலும், கீதாவை மதுரை தனியார் மருத்துவமனையிலும் சேர்த்தனர். இது குறித்து மதகுபட்டி போலீஸார் 3 பேர் மீது வழக்குப் பதிந்து, பிரபாகரன், ஜீவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

x