சென்னை: பஹல்காம் தாக்குதல் கோழைத்தனமானது என்று விஷால் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தினால் பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது இந்தியா. மேலும், அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி இந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த தாக்குதலுக்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதல் குறித்து விஷால் கூறும்போது, “ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலைக் கேட்டு நான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்த வன்முறை வெறிச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த துயரமான நேரத்தில் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்க வேண்டும். எந்தவொரு காரணத்திற்காகவும் அப்பாவி உயிர்களைப் பறிக்கும் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார் விஷால்.