ரஜினிக்காக எழுதிய கதைதான் ‘ரெட்ரோ’ - கார்த்திக் சுப்பராஜ் ஓபன் டாக்


ரஜினிக்காக எழுதிய கதை தான் ‘ரெட்ரோ’ என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ‘பேட்ட’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், ரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்பராஜ். அவருடைய அனைத்து படங்களிலும் ஏதோ ஒரு வகையில் ரஜினி சம்பந்தப்பட்ட விஷயங்கள் இடம்பெறும். தற்போது ‘ரெட்ரோ’ கதையுமே ரஜினி சாருக்காக எழுதியது தான் என்று பேட்டியில் தெரிவித்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

இது தொடர்பாக கார்த்திக் சுப்பராஜ் அளித்த பேட்டியில், “முதலில் ‘ரெட்ரோ’ கதையினை ரஜினி சாருக்காக தான் எழுதினேன். அந்தக் கதையில் நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும். அந்தக் கதையே எனக்கு காதல் கதையாக தோன்றியது. ஆகையால் காதல் கதையாக மாற்றி எழுதி வைத்தேன். அப்போது சூர்யா சார் கதை ஏதும் இருக்கிறதா என்று கேட்கும் போது, இந்தக் கதை அவருக்கு சரியாக இருக்கும் என நினைத்துக் கொடுத்தேன்.

சூர்யா சாரும் இந்தக் கதையினை படித்துவிட்டு ரஜினி சாருக்காக எழுதினீர்களா என்று கேட்டார். நானும் ஆம் என்றேன். இந்தக் கதையில் நாயகன் ஹீரோவாக இருக்கிறார், அதை கொஞ்சம் மாற்றலாம் என்றார். சூர்யா சாரை மனதில் வைத்து நாயகன் கதாபாத்திரத்தை மட்டும் மாற்றினேன்” என்று கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

x