“வெறுப்புக்கு இடம் இல்லை” - பஹல்காம் தாக்குதல் குறித்து ஆண்டிரியா கருத்து


ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், “இங்கே வெறுப்புக்கு இடம் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

சில காலத்துக்கு முன்பு பஹல்காமில் சுற்றுலா பயணியாக தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து அவர் வெளியிட்ட பதிவில், “பஹல்காம் பகுதிக்கு நானும் சுற்றுலாப் பயணியாகச் சென்றுள்ளேன். பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக என் இதயம் துடிக்கிறது. அதேபோல இந்த சம்பவத்துக்குப் பின் இன்னும் கூடுதல் கண்காணிப்பு, சோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ள காஷ்மீர் மக்களை நினைக்கையில் என் இதயம் உடைகிறது.

நமது நாடு (மத ரீதியாக) அதிகம் பிரித்து அணி திரட்டப்படும் ஒரு சூழலில், ஒரு குறிப்பிட்ட மதம், சமூகத்துக்கு எதிரான வெறுப்பாகத் திசை திருப்பப்படாமல் இருப்பது ஒரு குடிமக்களாக நமது கடமை. நான், என் கருத்தை அடிக்கடி வெளிப்படுத்துவது அல்ல. ஆனால், இந்தச் சூழலில் இதைச் சொல்ல வேண்டும் என உணர்ந்தேன். இங்கே வெறுப்புக்கு இடம் இல்லை. எனது பதிவின் பின்னூட்ட பகுதியிலும் இல்லை, நம் உலகிலும் இல்லை” என்று ஆண்டிரியா கூறியுள்ளார்.

முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்தக் கொடூர தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

x