‘ரெட்ரோ’ ரொமான்ஸ் படமா, கேங்ஸ்டர் சினிமாவா?


சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தின் ட்ரெய்லர், இது ரொமான்ஸ் படமா, கேங்ஸ்டர் சினிமாவா என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ள சூழலில், அதற்கு விளக்கம் தந்திருக்கிறார் இயக்குநர் கார்த்தி சுப்பராஜ்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “ரெட்ரோ ஒரு கேங்ஸ்டர் கதை அல்ல. முதல் முறையாக நான் ஒரு காதல் கதையை எடுக்கிறேன். என் முந்தைய படங்களில் நான் காதல் உறவுகளை அலசியிருக்கிறேன் என்றாலும் கூட, இதுதான் ஒரு முழுமையான காதல் கதையாக வந்திருக்கிறது.

அதேநேரத்தில் , ‘ரெட்ரோ’வில் நிறைய ஆக்‌ஷனும் உண்டு. ஆனால், இப்படம் ஒரு கேங்ஸ்டரை பற்றியது அல்ல. இந்தப் படத்தில் அதிகமாக காதல் உணர்வுகளை அலசியிருக்கிறேன். அதனால்தான் இதனை முழுமையான காதல் படம் என்று சொல்கிறேன். சூர்யாவை இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு முறை சந்தித்தேன். ஆனால் அப்போது அவருக்குச் சொன்னது நான் வேறொரு கதை. அவருக்கும் அது பிடித்திருந்தது. அப்போது எங்கள் இருவருக்கும் தேதிகள் ஒத்துவரவில்லை.

பின்னர் ‘ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்’ படத்தை தொடங்கி விட்டேன். அதனை முடித்த பிறகு மீண்டும் சூர்யாவை சந்தித்தேன். நாங்கள் ஏற்கெனவே பேசிய படத்துக்கு நிறைய முன் தயாரிப்பு வேலைகள் தேவைப்பட்டதால், அதனைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தோம். என்னிடம் வேறு ஏதேனும் கதை இருக்கிறதா என்று சூர்யா கேட்டார். அதுவரை அவர் செய்து வந்த கேரக்டர்களிலிருந்து விலகி ஏதாவது புதியதை முயற்சிக்க விரும்புவதாகப் பகிர்ந்து கொண்டார்.

‘ரெட்ரோ’ கதையின் மையக்கரு அப்போது தான் எனக்குள் தோன்றி இருந்தது. நான் அந்த யோசனையை முன்பே எழுதி வைத்திருந்தேன். அதை அவரிடம் கொடுத்து படிக்கச் சொன்னேன். அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. பின்னர் அவர் கொடுத்த ஒரு யோசனை எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அதில் அதிகமான கமர்ஷியல் ஆக்‌ஷன் கூறுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, பிரதான கதாபாத்திரத்தை மேலும் வலுவானதாக மாற்ற சூர்யா பரிந்துரைத்தார்.

எனக்கு அது பிடித்திருந்தது. கதையின் வேறொரு வடிவத்தை எழுதினேன். அதன் பிறகு நாங்கள் உடனடியாக படத்தை தொடங்கினோம்” என்று ‘ரெட்ரோ’ குறித்து கார்த்திக் சுப்பராஜ் விவரித்துள்ளார்.

x