பிராமணர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோரியுள்ளார்.
மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் புலே ஆகியோரின் வாழ்க்கைக் கதையை மையப் படுத்தி ‘புலே’ என்ற படம் உருவாகி உள்ளது. ஏப்.11ம் தேதி வெளியாக இருந்த இந்தப் படத்துக்கு மகாராஷ்டிராவை சேர்ந்த பிராமண சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அது தொடர்பான காட்சிகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் கேட்டுக் கொண்டது. திருத்தத்துக்குப் பின்னர், வரும் 25-ம் தேதி படம் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தை முன்வைத்து கிளம்பிய விவாதத்தில், பிராமணர்கள் குறித்து கடுமையான கருத்துகளை அனுராக் காஷ்யப் பதிவு செய்திருந்தார். இந்து அமைப்பினரிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்து வரும் நிலையில், “கோபத்தில், ஒருவருக்கு பதிலளிக்கும் போது என் வரம்புகளை மறந்துவிட்டேன். முழு பிராமண சமூகத்தைப் பற்றியும் மோசமாகப் பேசிவிட்டேன். என் வாழ்க்கையில் பல நண்பர்கள் அந்த சமூகத்தில் இருக்கிறார்கள். அவர்களுடைய பங்களிப்பு நிறைய இருக்கிறது. இன்று அவர்கள் அனைவரும் என்னால் காயப்பட்டுள்ளார்கள். என் குடும்பம் என்னால் காயப்படுத்தப்படுகிறது. நான் மதிக்கும் பல அறிவுஜீவிகள், என் கோபத்தாலும் என் பேச்சு முறையாலும் காயப்படுகிறார்கள்.
இப்படிச் சொன்னதன் மூலம், நானே என் சொந்தக் கண்ணோட்டத்திலிருந்து விலகிவிட்டேன். இந்தச் சமூகத்திடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால், யாரோ ஒருவரின் மலிவான கருத்துக்கு பதிலளிக்கும்போது கோபத்தில் அதை எழுதினேன். நான் பேசும் விதம் மற்றும் அவதூறான வார்த்தைகளுக்காக எனது நண்பர்கள், என் குடும்பத்தினர் மற்றும் சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதுபோல் மீண்டும் நடக்காமல் இருக்க, என் கோபத்தை நான் சரி செய்வேன். இந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேச வேண்டியிருந்தால், சரியான வார்த்தைகளைப் பயன்படுத்துவேன். நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.
‘சூப்பர் குட்’ சுப்பிரமணிக்கு சிகிச்சை: உதவி இயக்குநராக பணிபுரிந்து பின்னர், தமிழில் குணச்சித்திரம், காமெடி வேடங்களில் நடித்தவர் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி. பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினி முருகன், ஜெய் பீம், வானம் கொட்டட்டும் என பல படங்களில் நடித்துள்ளார். பரமன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், ‘சூப்பர் குட்’ சுப்பிரமணிக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், அவருக்குப் பண உதவி தேவை என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். திரையுலகில் சிலர் உதவ முன்வந்துள்ளதாக தெரிகிறது.
‘தனுஷ் 56’ இசை ஏ.ஆர்.ரஹ்மான்: மாரி செல்வராஜ் இயக்கி தனுஷ் நடிக்கும் இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உறுதிப்படுத்தினார். இது தனுஷின் 56-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் – மாரி செல்வராஜ் – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி இணையும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
ஹரிஷ் கல்யாண் அடுத்த படம்: ‘லப்பர் பந்து’ படத்துக்குப் பிறகு ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தை ‘லிஃப்ட்’ இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். இடா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரிட்டோ மைக்கேல் இசை அமைத்துள்ளார். வட சென்னை பின்னணியில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள ஹரிஷ் கல்யாணின் கதாபாத்திர போஸ்டரில் ரத்தம் தெறிக்கும் பின்புலம் கொண்டுள்ளது. இந்தப் போஸ்டரால் படம் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
‘சிவ பக்தர்’ யஷ்: நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரு பாகங்களாக திரைப் படமாகி வரும் ராமாயணக் கதையில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வருகின்றனர். ராவணனாக யஷ் நடிக்கிறார். அனுமனாக சன்னி தியோல், சூர்ப்பணகையாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ராவணனாக யஷ் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், உஜ்ஜைனியில் உள்ள மஹாகாளேஸ்வர் கோயிலில் நடிகர் யஷ் சுவாமி தரிசனம் செய்தார். வழிபாட்டுக்குப் பிறகு அவர் அளித்த பேட்டியில், “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிவபெருமானின் ஆசிவேண்டும் என்பதால் இந்தக் கோயிலுக்கு வந்தேன். நான் தீவிர சிவபக்தன். அனைவரின் மகிழ்ச்சிக்காகவும் நலத்துக்காகவும் பிரார்த்தனை செய்தேன்” என்றார் யஷ்.