சென்னை: சக நடிகை ஒருவர் பொறுப்பற்ற முறையில் தன்னிடம் பேசியதாக யாரையும் பெயர் குறிப்பிடாமால் நடிகை சிம்ரன் மறைமுகமாக விமர்சித்திருந்தார். அந்த நடிகை ஜோதிகாதான் என இணையத்தில் விவாதம் கிளம்பியுள்ளது.
சமீபத்தில் நடந்த விருது நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சிம்ரன் பேசும்போது, “என்னுடைய சக நடிகை ஒருவருக்கு சமீபத்தில் மெசேஜ் செய்திருந்தேன். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் உங்களை பார்ப்பதில் ஆச்சர்யமாக இருக்கிறது என்று கூறியிருந்தேன். உடனடியாக அவரிடம் இருந்து எனக்கு ரிப்ளை வந்தது. ‘ஆன்ட்டி’ கதாபாத்திரங்களில் நடிப்பதை விட இது பரவாயில்லை என்று கூறியிருந்தார். அப்படி ஒரு பொறுப்பற்ற பதிலை நான் அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.
என்னுடைய கருத்தைத்தான் அவரிடம் நான் சொல்லியிருந்தேன். அவரிடமிருந்து இன்னும் நல்ல பதில் எனக்கு கிடைத்திருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. ஆன்ட்டி ரோல்களில் நடிப்பது, 25 வயது பிள்ளைக்கு அம்மாவாக நடிப்பது ஒன்றும் தவறில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் நான் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். டப்பா கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு இது மேல் என்று எனக்கு தோன்றியது. நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதில் நமக்கு முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும்” என்று சிம்ரன் பேசியிருந்தார்.
சிம்ரன் ‘டப்பா கதாபாத்திரம்’ என்று குறிப்பிட்டதால், அந்த நடிகை ஜோதிகாதான் எனும் ரீதியில் கணிப்பும் விவாதமும் எழுந்துள்ளது. ஏனெனில், ஜோதிகா சமீபத்தில் இந்தியில் ‘டப்பா கார்டெல்’ என்னும் வெப் தொடரில் நடித்திருந்தார். அந்தக் கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப புகைப் பிடிப்பது, மது அருந்துவது, கெட்ட வார்த்தைகளை சரளமாக பேசுவது என ஜோதிகா துணிச்சலாக நடித்திருந்தது கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.