‘நாயகன்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் படம் ‘தக் லைஃப்’. சிம்பு, த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், அபிராமி உள்பட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜூன் 5- ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் ‘ஜிங்குச்சா’ என்ற முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் கமல் பேசியதன் 10 தெறிப்புகள் இதோ...
> “எனக்கும் இயக்குநர் மணிரத்னத்துக்கும் இடையில் எதுவும் மாறவில்லை. ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் அமர்ந்துகொண்டு நிறைய பேசியிருக்கிறோம். அதில் ஒன்று ‘நாயகன்’, இன்னொன்று ‘தக் லைஃப்’ ஆகி இருக்கிறது.”
> “நானும் மணிரத்னமும் இப்போது மீண்டும் இணைந்திருப்பதற்கு மக்கள்தான் காரணம். அவர்களிடம் இருந்து தீர்ப்பு வந்துவிட்டால் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என அனைவரும் தலைவணங்கி விடுவார்கள்.”
> “புதிய நட்சத்திரங்கள் உருவாவது அப்படித்தானே. அப்படித்தான் எஸ்.டி.ஆர் வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார். நானும் ரஜினியும், போஸ்டரில் இருந்த இடத்தில், அப்படித்தானே அவர் தந்தை டி.ராஜேந்தர் வந்து கலக்கினார். அதற்கு காரணம் மக்கள்தான்.”
> “மணிரத்னத்துக்கு நான் ஒரு பெயர் வைத்திருக்கிறேன். அது கோபத்தில் வைத்த பெயர்தான். அவர் வெறும் மணிரத்னம் இல்லை, ‘அஞ்சரை மணிரத்னம்’. படப்பிடிப்புக்கு ஐந்தரை மணிக்கே அவர் வந்துவிடுவார். ‘நாயகன்’ காலத்தில் இருந்தே அவருக்குத் தொடரும் பழக்கம் அது.
> “பொதுவாக எனக்கு பட்டம் எல்லாம் கொடுப்பார்கள். நான் ‘அஞ்சரை மணிரத்னம்’ பட்டத்தை அவருக்கு அளிக்கிறேன். இரவெல்லாம் படப்பிடிப்பு பற்றியே யோசித்துக் கொண்டிருந்தால்தான் ஐந்தரை மணிக்கு வர முடியும். படப்பிடிப்பிலும் அவரிடம் சினிமா பற்றி பேசினால்தான் தொடர முடியும்.”
> “ஒரு பெரிய நடிகர், புதிதாக வந்த ஒரு நடிகரை வாழ்த்தியிருக்கிறார், ‘சும்மா பயப்படாம நல்லா நடிங்க’ என்று. அதற்கு அந்தப் புது நடிகர் ‘நீங்களும் சார், சின்ன பையன்தானேன்னு கவனமில்லாம இருந்திடாதீங்க’ என்று சொன்னாராம். யார் சொன்னார் என்கிற பெயர் வேண்டாம். அப்படிப்பட்டவர்கள் இருக்கிற இந்த துறையில், எதைக் கண்டும் மலைத்துவிட கூடாது.”
> “மணிரத்னம் முதல் முறையாக, எங்கள் ராஜ்கமல் நிறுவனத்துக்கு படம் செய்திருக்கிறார். இதில் எல்லாம் இருக்கிறது. ஆனால், வேறு மாதிரி இருக்கும். எடுத்த சினிமாவையே எடுத்துக் கொண்டிருக்க முடியுமா? நீங்களும் பார்த்த சினிமாவையே பார்த்துக் கொண்டு இருப்பீர்களா?”
> “தக்லைஃப் படத்தில் நடித்த ஹீரோயின்கள் யாரும் எனக்கு ‘ஐ லவ் யூ’ சொல்லவில்லை. ஆனால், என்னை பார்க்கும்போதெல்லாம் அன்புடன் ‘ஐ லவ் யூ’ சொல்லும் ஒரே ஆள் ஜோஜு ஜார்ஜ் தான்.”
> “சிம்புவின் அப்பா டி.ஆர்-க்கு என்னை பிடிக்கும் என்று சொல்வதை விட என் மீது அளவு கடந்த பாசம். எனக்கு ஒன்று என்றால் என் நெஞ்சில் சாய்ந்து அழுது என் சட்டையை நனைத்து விடுவார்.”
> “டி.ஆர் அந்த தலைமுறை. சிம்பு இளம் தலைமுறை. எப்படி இருப்பாரோ என்று நினைத்தேன். ஆனால் பாசத்தில் தந்தை 8 அடி என்றால் இவர் 16 அடி இருக்கிறார். போட்டியும் பொறாமையும் நிறைந்த திரைத்துறையில் இப்படியெல்லாம் நட்பு கிடைப்பது கஷ்டம்” என்றார் கமல்ஹாசன்.