“வாய்ப்பை தவறவிடாதீர்கள்!” - ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ்


வாய்ப்பு வரும்போது தவற விட்டுவிடாதீர்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழங்கியுள்ளார்.

‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவருமே கலந்துக் கொண்டார்கள். இதில் சூர்யா பேசும்போது, ‘ரெட்ரோ’ படத்தில் பணிபுரிந்த அனைவரையும் குறிப்பிட்டு பேசி, நன்றி தெரிவித்தார் சூர்யா.

அதனைத் தொடர்ந்து சூர்யா பேசும்போது, “கார்த்திக் சுப்பராஜின் முதல் படத்தில் இருந்தே அவர் மீது பெரிய மரியாதை உண்டு. 82 நாட்கள் உங்களுடன் சந்தோஷமாக பணிபுரிந்தேன். ‘ரெட்ரோ’ என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை குறிப்பதாகும்.

எனது நோக்கம் என்ன என்றால், இங்கு பலரும் குறிப்பிட்டது போன்று அகரம் பவுண்டேஷன்தான். ஒரு நடிகராக இருப்பதால் அதை பல இடங்களில் கொண்டு போய் சேர்க்க முடிந்தது. அதை தனியாக செய்யவே இல்லை. அது அனைவருடைய சக்தியால் மட்டுமே செய்ய முடிந்தது.

படிப்பில் மோசமான எனக்கும் ஒரு வாழ்க்கையை கொடுத்து, சக்தி கொடுத்தீர்கள். அதன் மூலம் 8000 தம்பி - தங்கைகள் பட்டதாரி ஆகியிருக்கிறார்கள். இன்னும் நிறைய பேர் ஆவார்கள். அகரத்தில் உள்ள அனைவருக்கும் இதில் பங்கு இருக்கிறது.

ரசிகர்களின் அன்பால் மட்டுமே போய்க் கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்றுதான். வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கையில் நிறைய அழகான விஷயங்கள் நடக்கும். வாய்ப்பு வரும்போது அதை தவற விட்டுவிடாதீர்கள். அனைவருமே சின்ன வயதில் ஒரு ரிஸ்க் எடுத்துப் பார்க்கலாம். அதே மாதிரி வெறியுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அனைவருமே வாழ்க்கையில் ஜெயிக்கலாம்” என்று பேசினார் சூர்யா.

x