அஜித் தான் ‘குட் பேட் அக்லி’ டைட்டிலை முடிவு செய்தார்: ஆதிக் ரவிச்சந்திரன்


அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய படம் ‘குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜுன் தாஸ்,பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் வசூலை வாரிக் குவித்து வரும் நிலையில், இதன் ‘சக்சஸ் மீட்’டில் நெகிழ்ச்சியுடன் பேசினார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

தயாரிப்பாளர் நவீன், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், அர்ஜுன் தாஸ் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில், ஆதிக் ரவிச்சந்திரன் பேசும்போது, “நான் மட்டும் அஜித் சார் ரசிகனாக இல்லாதிருந்தால் என்ன ஆகியிருப்பேன் என்று தெரியவில்லை. நான் எப்போதும் அஜித் சாருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

நாங்கள் சந்தித்துக் கொள்ளும்போது, நான் பெரிய ஹிட் இல்லாத இயக்குநர். எனது முதல் படம் மட்டுமே ஹிட் கொடுத்தது. ஆனால், அஜித் சாரைப் பொறுத்தவரையில் எப்போதும் யாரிடமும் வெற்றி, தோல்வியைப் பார்த்தது கிடையாது. சக மனிதராகத்தான் பார்ப்பார். என்னிடம் இருந்து அவர் என்ன கவனித்தார் என்பது எனக்கு இப்போதுவரை கேள்வியாக உள்ளது.

அஜித் சார் தன்னை எப்போதும் பெரிய ஸ்டாராக கருதியது கிடையாது. அவர் தன்னை நடிகராக மட்டுமே நினைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டிலை முடிவு செய்ததும் அவர்தான்” என்றார் ஆதிக் ரவிச்சந்திரன்.

x