“விஜய் கட்சியில் நான் இணையப் போவதாக ஒரு சில வதந்திகள் உருவாகி இருக்கலாம். ஆனால், எனக்கு அரசியல் ஆர்வம் கிடையாது” என்று நடிகர் சிபிராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து சிபிராஜ் அளித்த பேட்டி ஒன்றில், “நான் விஜய்யின் தீவிரமான ரசிகன். ‘காதலுக்கு மரியாதை’ படத்திலிருந்தே அவருடைய ரசிகனாக இருக்கிறேன். இதனை பல இடங்களிலும் கூறியிருக்கிறேன். அவருடைய கட்சியில் இணையப் போவதாக ஒரு சில வதந்திகள் உருவாகி இருக்கலாம்.
ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனக்கு அரசியல் ஆர்வம் கிடையாது, அறிவும் கிடையாது. அரசியலுக்கு ஒருவர் வரவேண்டும் என்றால், அவர் எந்த துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதை விட்டுவிட்டு தான் அரசியலுக்கு வரவேண்டும். அதற்கு மிகப் பெரிய உதாரணம் விஜய் சார் தான். அந்த தியாகத்துக்கு தயாராக இருந்தால் மட்டுமே அரசியலுக்கு வரவேண்டும்.
என்னைப் பொறுத்தவரை என் கவனம் எல்லாம் சினிமாவில் மட்டுமே. இப்போது ‘டென் ஹவர்ஸ்’ படம் எனக்கு கம்பேக் படமாக இருக்கும். அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை” என்றார் சிபிராஜ்.
இம்மாதம் 18-ம் தேதி வெளிவரும் ‘டென் ஹவர்ஸ்’ படம் குறித்து சிபிராஜ் கூறும்போது, “சென்னையிலிருந்து கோவை செல்லும் ஆம்னி பேருந்தில் ஒரு கொலை நடக்கிறது. அதை யார் செய்தார்கள், எதற்காகச் செய்தார்கள் என்பது தான் கதை.
இந்தச் சம்பவத்தை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக நான் வருகிறேன். மறுநாள் காலையில் சபரிமலை செல்ல வேண்டும் என்ற நிலையில் 10 மணி நேரத்துக்குள் எப்படி விசாரித்து கொலையாளியை கண்டுபிடிக்கிறேன் என்கிற திரைக்கதை, யாரும் யூகிக்க முடியாததாக இருக்கும். இதற்கு முன், சில படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்திருந்தாலும் இது வித்தியாசமான கதைதான். வேகமான திரைக்கதை என்பதால் ரொமான்ஸ் காட்சிகள் இதில் இருக்காது. அடுத்து ‘ஜாக்சன் துரை 2’, ‘ரேஞ்சர்’ படங்களில் நடித்திருக்கிறேன்” என்றார்.