இளையராஜாவுக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல... - சி.எஸ்.அமுதன் சொல்வது என்ன?


தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவதைத்தான் இளையராஜா எதிர்க்கிறாரே தவிர, அவருக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல எனும் விதமாக இயக்குநர் சி.எஸ்.அமுதன் கருத்துப் பகிர்ந்துள்ளார்.

அஜித், த்ரிஷா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி சமீபத்தில் வெளிவந்த படம், ‘குட் பேட் அக்லி'. இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. இதில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்...’, ‘இளமை இதோ இதோ...’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ ஆகிய பாடல்களைப் பயன்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி இளையராஜா தரப்பில் அவரது வழக்கறிஞர் சரவணன், ‘குட் பேட் அக்லி' பட தயாரிப்பாளருக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், ஒருவார காலத்துக்குள் சம்பந்தப்பட்ட பாடல்களை நீக்க வேண்டும் என்றும் பாடல்களைப் பயன்படுத்தியதற்காக 7 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் சி.எஸ்.அமுதன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2022-ம் ஆண்டு ‘ரத்தம்’ படம் தொடர்பான அறிமுக வீடியோவில் ‘ஒரு கூட்டு கிளியாக...’ பாடலை பயன்படுத்தி இருந்தார். அதில், “இப்பாடலை பயன்படுத்துவதற்கு அனுமதி கேட்டு இளையராஜாவின் குழுவைத் தொடர்பு கொண்டோம். எங்கள் தயாரிப்பாளர்கள் பணம் கொடுப்பதற்கு தயாராகவே இருந்தனர். ஆனால், பணம் எதுவும் தேவையில்லை எனவும், பயன்படுத்திக் கொள்ளவும் என்று அவர்கள் தெரிவித்தார்கள்.

இளையராஜா தன்னிடம் அனுமதியை மட்டுமே எதிர்பார்க்கிறார். அது நாம் செய்யக்கூடியது தான். ஒரு துறையாக நாம் அவருடன் நிற்கவில்லை என்றால், வேறு யார் தான் அதற்கு தகுதியானவர்?” என்று சி.எஸ்.அமுதன் குறிப்பிட்டுள்ளார். அதாவது, தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்துவதைத்தான் இளையராஜா எதிர்க்கிறாரே தவிர, அவருக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல எனும் விதமாக அவர் கூறியுள்ளார்.

x