நயன்தாரா ஆவணப்பட விவகாரம்: நெட்பிளிக்ஸ் மனு தள்ளுபடி


நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்தது.

இதில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் படிப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம், நயன்தாராவிடம் ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த வழக்கை, ஆரம்பக் கட்டத்திலேயே நிராகரிக்கக் கோரி நெட்பிளிக்ஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக நடந்தது.

அப்போது நெட்பிளிக்ஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பார்த்தசாரதி, ‘நானும் ரவுடிதான்’ படத்தில் இடம்பெறாத படப்பிடிப்பு காட்சிகளுக்கு வுண்டர்பார் நிறுவனம் பதிப்புரிமை கோர முடியாது. அந்த காட்சிகள் 2020-ம் ஆண்டே பொதுத்தளத்தில் வெளியாகிவிட்ட நிலையில் 2024-ம் ஆண்டு காலதாமதமாக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை காப்பிரைட் சட்டத்தின் கீழ் தொடரமுடியாது. இந்த ஆவணப்படம் தொடர்பாக 2024-ம் ஆண்டு டிச.11-ம் தேதி தனுஷின் நிறுவனம் சார்பில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஆவணப்படம் வெளியான ஒரு வாரம் கழித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை ஆரம்பக்கட்டத்திலேயே நிராகரிக்க வேண்டும்” என்றார்.

வுண்டர்பார் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகள், நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்ததும் அந்த காட்சிகளை நீக்கும்படி அறிவுறுத்தியும் கேட்கவில்லை. மாறாகப் பதிப்புரிமைக்காக நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என தனுஷுக்கு எதிராகப் பொதுவெளியில் கடிதம் எழுதினார். நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா நடித்த போது அவர் செய்துகொண்ட உடை அலங்காரம் உட்பட அனைத்தும் அந்த படத்தைத் தயாரித்த நிறுவனத்துக்கே சொந்தமானது என ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டு நயன்தாரா கையெழுத்திட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அப்துல் குத்தூஸ் பிறப்பித்த உத்தரவில், ‘‘வுண்டர்பார் நிறுவனம் சார்பில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி நெட்பிளிக்ஸ் தாக்கல் செய்துள்ள மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ எனக்கூறி தனுஷ் நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணையை பிப்.5-க்கு தள்ளி வைத்துள்ளார்.

x