அதிமுகவுக்கு ஆதரவாக பேசியதால் தான் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார் என நடிகை விந்தியா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைதான விவகாரம் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கோவை சைபர் க்ரைம் போலீஸாரால் கடந்த 4-ம் தேதி சவுக்கு என்ற யுடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கர் கைது செய்யப்பட்டார். பின்பு அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்றிரவு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட நடிகை விந்தியா, பின் செய்தியாளரை சந்தித்து பேசுகையில், ”அமைச்சர் ரகுபதியின் ஆரம்ப அரசியல் ஆரம்பித்தது அதிமுகவில் தான். இங்கிருந்து போனவர் தாய் வீட்டை பத்தி தப்பா பேசுவது தவறு. திமுக போல் ஊழல் ஆட்சி இங்கு நடக்கவில்லை. இந்த இயக்கத்தை பற்றி பேச யாருக்கும் அருகதை கிடையாது. இந்த இயக்கம் பிளவு படாது. தேர்தலுக்குப் பின்பு எவ்வளவு பலமாக இருக்கிறது... எவ்வளவு பெரிய கட்சியாக வரும் என்பதும் தெரியும்.
திமுகவை கதி கலங்க வைத்து ஆட்சியை பிடிப்பதை இரண்டு வருடத்தில் பார்க்க போகிறோம்” என்றார்.
பின்பு அவரிடம் சவுக்கு சங்கர் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. “சவுக்கு சங்கர் வழக்கு விசாரணையில் இருக்கிறது. இப்போது பதில் கூற முடியாது. அவருக்கு தேவைப்படும் ஆதரவில் உண்மை இருந்தால் கண்டிப்பாக நாங்கள் துணை நிற்போம். தமிழ்நாடு முழுவதும் கஞ்சா வழக்கில் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என மக்களுக்கு தெரியும்.
நேர்மையாக, உண்மையாக இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றால் முதலில் யாரை விசாரிக்க வேண்டும். திமுகவின் முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் யாருக்கு நெருக்கமாக இருந்தார்? உதயநிதிக்கும் அவருடைய குடும்பத்திற்கும் நெருக்கமாக இருந்தார். சவுக்கு சங்கரை தான் விசாரிக்க வேண்டுமா ?
நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் சவுக்கு சங்கர் பேட்டி கொடுக்கிறார். அவர் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார். எனவே அவரை கைது செய்து இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். உண்மை உலகிற்கு தெரியும். யார் தவறு செய்தார்களோ அவர்களுக்கு தண்டனை கிடைக்கும்” என்றார்.